களிமண்

என்னை களிமண் என்று நீங்கள் சொல்வதை
நான் ஒத்துக்கொள்கிறேன்...
நீங்களாகவே முடிவெடுத்து  என்னை ஒரு பொம்மையாக்குகிறீர்கள்..
ஒரு  முக்கிய புள்ளியின் கொலுவில் 200ல் ஒன்றாக நான்..
எனக்கிது  வேண்டாம்..
நான் பானையாகிறேன்..
ஆயிரம் பிறை கண்ட அந்த ஏழை கிழவியின்
குடிலில் தண்ணீர் சுமப்பேன்..
பல கதைகள் கிடைக்கும்.. தாகம் தீர்ப்பேன்..
வாரம்  ஒருமுறை வரும்  அவள் பேத்தியின்
இடுப்பில்அமர்ந்து வளையோசை கேட்பேன்..
அண்டை  வீட்டாரின் கைப்பிள்ளையாவேன்..
அவளின் இறுதி ஊர்வலத்தில் வெட்டுண்டு உடைந்தாலும்
ஒரு வாழ்வு இருக்கும் எனக்கு..
கரப்பான்கள் ஊரும் பரண்பெட்டியில்
வருடமெல்லாம் மூச்சடைத்து
ஒன்பது  நாளைக்கு மட்டும்
ஆண்டவனாக மாற
நான்  ஆளில்லை..
விட்டுவிடுங்கள்..
முதல் வரியை தருவதுபோல் தந்துவிட்டு
முழு கவிதையையும் உள்ளிழுத்துக்கொல்கிறது
கடல்..