ஒரு கருப்பு அழகி 
நீல சோகத்துடன் இருந்தாள்..
பச்சை பொய்யொன்றை  சொன்னேன்..
சிவந்துவிட்டாள்.

கலையை ரசிக்கும் மனம்

கதைகளின் காட்டுத்தீயில்
கருகும் மனம்
கவிதைகளின் பேரலைகளில்
தத்தளிக்கும் மனம்
பேரானந்தத்தில் திளைத்து
மென்மையாய் சிரிக்கும் மனம்
இவைதானே கலையை ரசிக்கும்
சிறு பொழுதின் மனம்?
எத்தனை பொய்களை கடக்க வேண்டும்
சிறு உண்மைகளை தரிசிக்க..

ஒரு பேரிடரை எதிர்பார்த்து..

நான் ஒரு பேரிடரை எதிர்பார்த்து தினமும் காத்திருக்கிறேன்
தினமும் அதற்காகத்தான் செய்திகளை வாசிக்கிறேன்
அருகில் ஒரு புயலோ, எரிமலையோ, சுனாமியோ
இல்லாமல் இருப்பது அயர்ச்சையாக இருக்கிறது

பள்ளிக்கு விடுப்பு கிடைப்பதாக 
ஒரு அல்ப மனநிலைதான் ஆனாலும்
ஒரு வாரம் அலுவல் இல்லது,
மிகவும் கொஞ்சமே சமைத்து
மின்சாரமோ அலைபேசியோ இல்லாமல்
சக மக்களை பற்றி யோசித்து
கொஞ்சமாக உதவி செய்து 
சோம்பலான சில நாட்கள் தேவைப்படுகிறது


ஒரு பேரிடர்
நம் ஓட்டத்தை தடுத்து
"கொஞ்சம் நில்லு..தண்ணி குடி" என்கிறது..

ஒரு பேரிடர்
அடிப்படை உணர்வுகளை
கிளர்ச்சியடைய செய்கிறது

ஒரு பேரிடர்
நம் சொந்தங்களுக்காக
ஏங்க வைக்கிறது

ஒரு பேரிடர்
நம்மையே ஆட்க்கொண்டாலும்
பெரிதாக ஒன்றும் கஷ்டமில்லை