அவளது முலைகாம்புகளில் 
என்றும் பிச்சையெடுக்கிறேன் 
ஆணாகிய என் பாவத்தை 
தலை கோதியபடி 
அவள் கழுவிக்கொண்டிருக்கிறாள் 
ஆணின் ஆசை 
பெண் தன் மீது ஆசை கொள்ளவேண்டும் என்பது..
அவனது பேராசை 
அவளே அதை 
சொல்ல வேண்டும் என்பது 
இந்த பெரும் அண்டத்திடம் 
நான் வேண்டுவதெல்லாம்
ஒரு சிறு மேகப்பந்தும் 
அது தரும் ஒற்றை மனிதனுக்கான 
நிழலும்..
ஒரு காட்டில் பயணிக்கிறேன்
என் அறையில் அமர்ந்தபடி
சொல்லின் அதீத விருட்சத்தை 
தரிசிக்கிறேன்
பேய்கள் பிரசவிக்கும் 
இமை மயிர் உதிர்ந்து
அகம் நொறுக்கும் 
பாவங்கள் காட்டும் வானில் 
சில நட்சத்திரங்களை எண்ணுகிறேன்
தூறமாய்  கேட்கும் அருவி 
நம்பிக்கையின் திசையில்
சுற்றி சுற்றி  வருகிறேன்   
ஆதி பிழை உணர
சிறுமி  கையில் அவளது  மாட்டின்  கயிறு 
இழுவை என்று சொல்ல முடியாத சிறு சொடுக்கல் 
சொடுக்கல் என்று முடியாத சிறு இழுப்பு 
போதுமானதாக இருக்கிறது..
அவளது உள்ளங்கை அளவிலான 
அதன் கருவிழியை உருட்டி உருட்டி 
அத்தனை பெரு பச்சை மேய்ச்சலை 
அப்படியே விட்டுவிட்டு 
பாதி பசியையும் பெரு உடலையும் 
தள்ளியபடி 
அவளுடன் செல்கிறது 
அதன் மனம்..
தொலைத்துவிட்டேன் என்று தெரிந்த நொடியில்தான் 
நான் உறைந்திருக்கிறேன்..
நம்பிக்கையுடன் நான்தானே உன்னிடம் என்னை கொடுத்தேன்..
நீ தொலைத்து விட்டதை 
நான் எப்படி மீட்க முடியும்..
வேட்டையாடிய ஓநாயை 
பழக்கி கருணை பயின்று 
நாயென மாற்றி 
உன் பின்னே அலைய விட்ட வரைக்கும் சரி..
சுடும் வெயில் கோடையில் 
குப்பைமேட்டில் விட்டு சென்ற பின் 
மிரண்டிருக்கிறது அது..
கொஞ்சம் முயன்றால் ஓநாயாக மாறலாம்தான்..
உன் வாசத்தை மட்டும் தேடும் நாசியை 
தானே கீறிக்கொண்டிருக்கிறது..
நான் என்று ஆரம்பிக்கும் எந்த ஒரு வரியிலும் 
கவிதை விழுவதில்லை..
நான்-ஐ எழுதிவிட்டு வெறிக்கும் கவிஞன் 
வெகு நேரத்திற்கு பின் 
அதை அழித்து விடுகிறான்..
அழிக்கப்பட்ட நான்-களெல்லாம் 
நினைவில் ஒன்றை ஒன்று நோக்கி 
சலிப்புறுகின்றன..
இதுவைரை எதுவும் செய்ய வில்லை..
இனிமேலும் எதுவும் செய்ய போவதுமில்லை.
தெரிந்தும் முயற்சி என்ற பெயரில்
வாழ்ந்து கொண்டிருப்பவனின் 
நான்-கள் இரக்கமற்று குப்பையில் வீசப்படும் 
பின் அதுவே மக்கி அழியும்,..

ஒரு காடு 
மூச்சை இழுத்து விடும்
நிமிடங்களில்....
ஆம்..அப்படி நடக்கும் தானே?

செம்பருத்தியைப்போல் பூத்திருக்கிறது 
தென்னைமர நிழல் 
அதன் மத்தியில் அமர்ந்து 
அசைபோடுகிறது  மாடு 
நிழல் நகர நகர 
மாடும் நகருமா? 
தெரியவில்லை 
ரயில் நகர்ந்து விட்டது 
மீட்சி அடையமுடியாத பெரும் பலூன் 
என்று நம்பியவளுக்கு தெரிந்தது 
அது குட்டி குட்டி பலூன்களால ஆன
ஒரு பெரிய காற்று மூட்டை என்று..
புரிதலற்றுப்போதல் என்பது 
ஒவ்வொன்றாக உடைக்கப்படும் காற்று குடுவைகளே..
காற்றில் கடிவாளத்தை இழுத்து வேகம் செல்லும் 
சிறுவனின் குதிரைதான் அது..
அவளது பறத்தல் 
கீழிறங்கி  அந்தர தொங்கலாக  மாறும் தருணத்தில் 
அவள் தன்  சிறகுகளை  
பிரசவித்துக்  கொண்டிருந்தாள்..

கள்ளம்

குழந்தைக்கு தெரியாமல் சாப்பிடப்படும் சாக்லைட்டுகள் 
தாயிடம் எப்போதும் இருக்கும்தானே..
அந்த கள்ளத்தில் என்னையும் சேர்த்துக்கொள்..
பெருந்துயர் நாளின் உன்னுடைய தூக்கத்தைப்போல  
என்னிடம் நீ வந்து போ..
கோடை பயணத்தில் பழச்சாறுக்காக நிற்பதாக 
எண்ணிக்கொள் 
சில்லிட வைக்கும் சில நொடிகளை ஸ்பரிசித்துவிட்டு 
மீண்டும்  தழலை உடுத்திக்கொள் 

உண்மை மட்டும்  பேசவைக்கும் 
மோஸோ  திரவத்தை பருகியபின் 
ஆணையோ  பெண்ணையோ கேட்டால் 
தங்கள்  ஸ்பரிசிக்க நினைக்கும் 
ஒரு பெயரை சொல்லுவார்கள்..

கேட்பதற்கும்  இங்கு யாருமில்லை..
மோசோவை குடிப்பதற்கும் யாருமில்லை..

நிறைவேறாத மோகமே 
புழுவாக நெளிகிறது..

எல்லா பயணங்களும் 
தேநீர் உடனோ 
தேநீரை நோக்கியோ 
அல்லது தேநீரை நம்பியோ 
வாய்க்க பெருமாயின் 
எந்த குழப்பமும் இல்லை 


உன் உடலில்  நான் கண்டுபிடித்த தழும்பில் 
ஆரம்பிக்கறது இந்த நாளுக்கான ஆராதனை 
புதிய கிளையை கண்டுகொண்ட காட்டு  அணில்  
அதையே   சுத்தி சுத்தி வருகிறது ..  
பசி மீண்டும் மீண்டும் வந்தாலும் 
பழையதென சொல்ல முடியவில்லை   
புதிதான உடலை 
பருகுகிறது கிளர்ச்சி  
 

பிணம் இன்னும் வரவில்லை

ஒரு வீட்டை இழவுக்கு தயார்படுத்துதல் 
என்பது 
அந்த வீட்டின் அத்தனை சந்தோஷங்களையும் களைந்து 
ஒரு தனி அறையில் பூட்டி விடுவது..
அந்த வீட்டின் கடவுள்களை தண்டிக்க 
படங்களை சுவரோரம்  திருப்பி வைப்பது.. 
"எந்த திசையில் தலை விளக்கு வைக்க வேண்டும்?" என்ற
கேள்வியின் எதார்த்தில் கொஞ்சம் சுதாரிப்பது..
வரும் அத்தனை பேர்களில் 
ஒரு சிலருக்காக மட்டும் அழுகையை தேக்கி வைப்பது..
ஒரு மகிழ் தருண புகைப்படத்தை கொடுத்து 
இறப்பின் முகமாக மாற்றும் கொடூரத்தை 
தன் கையாலேயே நிகழ்த்துவது...
இப்போது தேவைப்படும் முக்கிய குறிப்பொன்றை தேடி 
அதை இறந்தவரிடமே கேட்க நினைத்து 
பின் அவரது இல்லாமைக்கு பழகுவது..
சொல்லாமல் விட்டுப்போன எளிய சொற்களை நினைத்து 
கழிப்பறையில் தண்ணீரை வெறுப்பது..
கேட்கவில்லை என்பதற்காக செய்யாமல் விட்ட உதவிகளை 
ஒவ்வொன்றாய் கோர்த்து கண்ணுக்குள் குத்திக்கொள்வது..

இன்னும் இரண்டு நாட்களில்
அவரின் உயிர் பிரிந்துவிடும் என்று சொல்லிவிட்டார்கள்
இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?
இல்லாமல் போகப்போகும் இந்த உயிரை 
அது இல்லாமலே போவதற்குள் 
லேசானதாக மாற்ற 
நான் எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்?

கொஞ்சம்  நெகிழ்ந்திருக்கிறேன் 
வேறு  எதுவுமே நடக்கவில்லை இத்தருணத்தில் 
லாலிபாப்பை  சாப்பிடும் குழந்தையைப்போல 
இந்த நொடிகளை - 
வழிய வழிய குதப்பிக்கொண்டிருக்கிறேன்  

 
வீட்டை காலி செய்தாயிற்று 
கடைசியாக பூஜையறையை  பார்த்து வணங்கினார் 
அங்கு வேறெதுவும் இல்லை - காலிதான் 
பறவையின் சிறகுகள் 
எவ்வளவு பெரிதாக வரையப்பட்டாலும் 
நிஜத்தைவிட 
சிறியதாகவே இருக்கின்றன..

நடுக்கம்

எனக்கு ஒரு மூன்று வயது  குழந்தை  இருக்கிறாள்..

நேற்று  நான் வண்ணங்கள் வைத்து ஏதோ  வரைந்தேன் 
இன்று  அவளும் வண்ணங்கள் வைத்து வரைந்தாள்.

நேற்று  நான் கோபத்தில்  கத்தினேன் 
இன்று அவளும் கோபத்தில் கத்தினாள் 

நேற்று  நான் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றினேன் 
இன்று அவளும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றினாள் 

நேற்று நான் பொய் சொன்னதை கண்டுபிடித்தாள் 
இன்று அவளே ஒரு பொய் சொன்னாள் 

நேற்று நான் தேன்  சாப்பிட்டு உச்சு கொட்டினேன் 
இன்று அவள் தேன்  சாப்பிட்டு உச்சு கொட்டினாள் 

இன்று நான் 
என்ன செய்வதென்று யோசித்து கொண்டிருக்கிறேன்..
எல்லா மணங்களிலும் அதன் வேர்கள் 
நீக்கமற நிறைந்து வளர்ந்திருக்கிறது 
இத்தனை காலம் திளைத்த விஷத்தை 
வேரோடு முறிக்க ஒரு பேரன்பு தேவைப்படுகிறது.
சூரியனின் வெளிச்சத்தை போல்  சகல உலகுக்கும் 
பொதுவான ஒரு பேரொளி தேவைப்படுகிறது .
ஒரு சூஃபியின் ஆனந்தத்தை எல்லோருக்கும் பரப்பும் 
ஒரு பேரானந்தம் தேவைப்படுகிறது.
அன்பின் ஒரே அலைவரிசையில் எல்லோரையும் கோர்த்து 
நம் நாளங்களை மீட்ட ஒரு பெரும் இசை தேவைப்படுகிறது.
நாமெல்லாம்  சேர்ந்து நம்மை மீட்டெடுக்க 
ஒரு பெரும் அன்பியாக்கம் தேவைப்படுகிறது..

பந்தம்

மரத்திலிக்கும் ஒரு பழம் 
தன்னுள் ஒரு மரத்தையே வைத்திருப்பது தெரியாமல் 
காத்திருக்கிறது 
கைகளால் பறிக்கப்பட 
காற்றால் தள்ளப்பட 
அணிலால் கடிக்கப்பட  
பறைவையால் கொத்தப்பட .
பழம் என்பதை மறக்கும் பழம் 
கைகள் வளர்த்து 
கீழே குதித்து 
மண்ணில் புதைந்து 
வேர்கள் பரப்பி 
விருச்சமென வளர்ந்து 
உங்களுடன் போட்டியிடும் 

பீஃப் பிரியாணி

சின்ன மகன் பீஃப்   பிரியாணி கேட்டான் 
ஞாயிறன்று வீட்டு ஓனர் இருக்கமாட்டார் -  அதுதான் சரியான நாள் 
காலை எட்டு மணிக்கெல்லாம் 
ஏரிக்கரைக்கு அப்பால் இருக்கும்  குப்பை மேட்டின்  
அருகில் இருக்கும் இந்த ஊருக்கான மாட்டிறைச்சி கடையில்
ஒரு கிலோ வாங்க வேண்டும் 
பின், தெரு முனையில் இருக்கும் மளிகை கடையில் 
வெங்காயம் மிளகாய் மசாலா வாங்க வேண்டும்  
இல்லை இல்லை - முதலில் இறைச்சி வாங்கி 
பின்தெரு வழியாக வீட்டில் வைத்துவிட்டு, கைகால் கழுவி  
பின் மீண்டும் கடைக்கு போக வேண்டும், 
இறைச்சி வாசனை பிடிபட்டால் கடைக்காரர் முறைப்பார் 
பிரியானி  செய்து எல்லோரும் சாப்பிட்டவுடன் 
பாத்திரங்களை இரண்டுமுறை கழுவ வேண்டும் 
மாலையில் அம்மா வந்தால் முகம் சுளிப்பாள் 
பெரியவன் சொல்ல மாட்டான் 
சின்னவன் இன்னும் சின்னவனாகத்தானே இருக்கிறான் 



பனி விழும் முன் காலை வேளைகளில் 
கைகள் மட்டும் ஸ்பரிசித்து 
வெப்பமடையும்  
அன்பிற்கு பழகிய  உடல் 

அகராதி

அழுக்கு என்றால் துடைக்க தயார் 
எச்சில்  என்றால் கொஞ்சம் தயக்கம்.
தொடுதல், ஸ்பரிசம் என்பதிலிருக்கும் நேசத்தை 
தீட்டு என்று ஒதுக்கி வைப்பர் 
ஊர் என்று இருந்த மக்களை 
சேரி என்று தள்ளி வைத்தர் 
இறைச்சி என்று சுவைத்து வந்ததை 
கவுச்சி என்று கூறி முகம் சுளித்தர் 
படையலாய் அளித்து வந்ததை 
பிரசாதம் என்று சொல்லி தனியாய் வைத்தான் 


பிரிவினையின் நஞ்சை  அச்சில் வார்த்து 
மொழியின்  அகராதியில் ஏற்றி  
அங்கீகரிக்கும் மூடர்கள்..
 
 

உணவு ஏணி

சந்நிதியில் அர்ப்பணிக்கும் பிரசாதம் 
பெண் செய்ய தடை.. ஆண்  செய்ததே மேல்.
பிரசாதம் தான் மேல், மற்றவையெல்லாம் அதற்க்கு கீழ் 
சைவம் மேல், அசைவம் கீழ் 
சைவத்திலும், நிலத்தடி வளரும் காய்கள் கீழ் 
அதிலும் வெங்காயம் கீழ் 
வெங்காயம் சாப்பிடுவோருக்கு பூண்டு  கீழ் 
பூண்டு சாப்பிடலாம், சிலருக்கு முட்டை கீழ் 
முட்டையிலும் கோழி முட்டை சாப்பிடுவோருக்கு வாத்து முட்டை கீழ் 
முட்டை சாப்பிடுவோருக்கு இறைச்சியெல்லாம் கீழ் 
கோழி மட்டும் சாப்பிடுவோருக்கு மற்றவை கீழ் 
ஆடும் மீனும் சாப்பிடுவோருக்கு காடை, முயல் கீழ் 
இதுவரை சாப்பிட்டாலும் மாடு கீழ் தான்.
இதெல்லாம் சாப்பிட்டாலும் பன்றி கீழ் தான் 
அதற்க்கு கீழ் வரும் உடும்பும், எலியும், ஈசலும்..
எனதருமை உலக நண்பர்களே...
உணவு சங்கிலியைத்தானே நீங்கள் முன்மொழிந்தீர்கள்,
எங்களிடத்தில் ஒரு உணவு ஏணி இருக்கிறது பார்த்தீர்களா..
இந்த ஏணியில் நீங்கள் மேலே செல்லவே முடியாது 
வேண்டுமானாலும் கீழே சென்று வரலாம் - 
நிறைய அன்புடன்.

 நெடுஞ்சாலை நடுவில் பூத்திருக்கும் 
செவ்வரளியை பறிக்கும் பெண்ணொருத்தி 
அத்தருணத்தில் சட்டையணிந்திருக்கிறாள்..
வீட்டிற்கு சென்று சூடிக்கொள்ளும்போது 
தாவணிக்கு மாறுவாளோ?