சோகத்தை மறைக்காதே நண்பா

 அவள்தான் முதலில்  பிரிவை அறிவித்தாள் 
அது ஒரு பேரிடியாய் இருக்குமென்று இவன் எண்ணினான் 
அழ முற்பட்டான் 
தலை சுற்றல் எதுவும் இல்லை.
எதிர் வந்த லாரியை பார்த்து தற்கொலை செய்ய வேண்டுமா 
என்று அவனே கேட்டு..ச்சீ  என்று விட்டுவிட்டான்..
அவள் பிரிந்ததை விடவும் 
அந்த பிரிவு எந்த ஒரு பெரிய சோகத்தையும் 
அவனுக்கு தரவில்லை என்பது வெறுப்பாய் இருந்தது.
உணவு, உடை, உறக்கம், மணம், சுவை எல்லாம் 
சரியாக வேலை செய்தது..
நண்பர்களிடம் சோகமாக முகத்தை வைத்து கொண்டான் 
அவர்களின் ஆறுதல்களை ஏற்றுக்கொண்டான்
தன்னை மறந்து கொஞ்சம் சிரித்துவிட்டாலும் 
நண்பன் சொன்னான் "சோகத்தை மறைக்காதே நண்பா" என்று..

அவன் பார்த்த திரைப்படங்கள், கதைகள், கவிதைகள்
எல்லாவற்றையும் திட்டினான்..
சத்தமாய் கத்தினான் - காதல் என்பது 
இந்த உலகமே ஏற்றுக்கொண்ட பெரும் பொய்..
நண்பன் மீண்டும் சொன்னான்  "சோகத்தை மறைக்காதே நண்பா" என்று..
"நீ காதலித்திருக்கிறாயா?" 
"ஆம்..மூன்று முறை.." என்றான் நண்பன்.
"பிரியும்போது உனக்கு சோகமாக இருந்ததா?" 
"பெரிதாக இல்லை" 
"அப்போ எல்லாம் போய் தான?" - இவன் சொன்னான்.
"அப்போ சேர்ந்திருந்தப்போ நீ சந்தோஷமா இல்லையா?" நண்பன் கேட்டான்.
"இருந்தேன்.." 
"அப்போ அது உண்மையில்லயா ?" 
".."

இப்போது இவன் 
சேர்ந்திருக்கும்போது சந்தோஷத்தை தருகிற 
பிரியும்போது சோகத்தை தராத 
தனது அடுத்த காதலுக்காக 
காத்திருந்தான்..

எந்த தருணத்திலும் பிரிந்து விடலாம் 
என்ற ஒப்பந்தத்துடன் சேர்ந்திருப்பது 
மூச்சு முட்டுகிறது.

நான் டிவி பார்க்கிறேன், நீ பாட்டு கேட்கிறாய் 
நான் தோசை சாப்பிடுகுறேன், நீ ஆர்டர் செய்கிறாய் 
என் கப், உன் கப் 
என் துணி, உன் துணி 
என் பைக், உன் ஸ்கூட்டர் 
என் சாவி, உன் சாவி
என்  வாழ்க்கை, உன்  வாழ்க்கை 
என்னுடன் பகிர்ந்து கொள்ள 
நம் வீட்டில் கழிப்பறையை தவிர 
வேறெதுவும் உன்னிடம்  இல்லை 

ஒரு சிலந்தியின் நேர்த்தியுடன் 
ஒரு நாளை நீ சீராக கடந்து விடுகிறாய் 
ஒரு விடுதி காவலனைப்போல் 
உன் அசைவுகளை நான் குறிப்பெடுக்கிறேன்
எந்த மாற்றமுமின்றி இயந்திர சுத்தத்துடன் நீ இயங்குகிறாய் 
நான் கோவமாய் கத்தினால்  என்ன செய்வாய் - தெரியாது.
நான் குடித்துவிட்டு வந்தால் என்ன செய்வாய் - தெரியாது.
எனக்கு விபத்தில் கை உடைந்தால் என்ன  செய்வாய் - தெரியாது 
இதெல்லாம் நடக்காமல்  உனது இயந்திரகதியை 
நானும் மிகக்  கவனமாக காத்து வருகிறேன்.

நான் வெடித்து அழுது நிர்வாணமாய் 
உனக்கு முன்னால் நிற்க தயார்தான் 
அப்பொழுதும் நீ  எதுவும் சொல்லமாட்டாய் என்று தெரிகிறது..
என் பயமெல்லாம் ஒன்றுதான் 
"என்ன செய்ய முடியும்.. அழாதே"
என்று பக்கத்துக்கு வீட்டுக்காரனைப்போல்  
நீ சொல்லி விடுவாய் என்பதுதான்..

நேசத்தின் கண்கள் எப்பொழுதும் நீர்த்திருக்கின்றன..