தூத்துக்குடி

என் தமிழ்நாடு என்ற ஒரு நம்பிக்கை இருந்தது
அதில் ஒரு அமைதி இருந்தது
அதில்தான் விழுந்தது உன் முதல் குண்டு.

காந்தியும் பெரியாரும் கலந்து தெளிந்த மக்கள்
அவர்கள் தேர்ந்தெடுத்த இந்த அரசு
எத்தனை தெளிவானதாக இருக்க வேண்டும்?
மீண்டும் நிரூபித்து விட்டீர்கள்..
நீங்கள் எங்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லையென..
இந்த முற்போக்கான சமூகத்துக்கான தலைமை வகிக்க
நீங்கள் வக்கற்றவர்களென
உங்களுக்கான எங்களின்  கருணையில்தான்
உங்களின் இரண்டாவது குண்டு வெடித்தது..

நாங்களெல்லாம் ஒன்று திரள்வது எதற்காக தெரியுமா?
உங்களின் தவறுகளை சுட்டிக்காட்ட..
நீங்கள் திருத்திக்கொள்ள..
உங்களுக்கு ஒரு வாய்ப்பளிக்க.
நன்றாக யோசித்து சொல்லுங்கள்..
ஸ்டெர்லைட் உங்கள் தவறு..
ஜல்லிக்கட்டு உங்கள் தவறு..
விவசாய தற்கொலைகள் உங்கள் தவறு..
பெட்ரோல் விலை உங்கள் தவறு..
காவிரி உங்கள் தவறு..
இன்னும் நிறைய..
தவறுகளை சுட்டிக்காட்டும் ஒரு துடிப்பான  சமூகம்..
அவர்களை சுட்டுக்கொள்ளும் ஒரு மலடான அரசு..

தூத்துக்குடியில் சில ஆயிரம் மட்டுமல்ல..
நாங்கள் எல்லா இடத்திலும் உள்ளோம்..
இன்னும் பொறுமையாகத்தான் இருக்கிறோம்..
அவ்வளவுதான் சொல்ல முடியும்..
ஏனெனில் எங்களின் பொறுமை
எங்களுக்கே வெட்கமளிக்கிறது..
உங்களின் ஏதோ ஒரு குண்டு எங்கள் பொறுமையை
கொஞ்சம் உரசித்தான் சென்றிருக்கிறது..


எங்களுடையது
அகிம்சையின் கோபம்
முற்போக்கின் கோபம்
சுயமரியாதையின் கோபம்
தர்க்கத்தின் கோபம்
உங்களுடையது?
அதிகாரத்தின் கோபம்
அடக்குமுறையின் கோபம்
கையாலாகாத அரசின் கோபம்..
எங்கள் பக்கம் ஞாயமிருக்கிறது என்பதை
ஒப்புக்கொள்ள முடியாத அகங்காரத்தின் கோபம்
உங்களுடையது ஒரு கோழையின் கோபம்..
நீங்கள் எங்களின் தலைவர்களாக இல்லை,
சமமான எதிரியாகக்கூட இருக்க
வக்கற்றவர்கள்..

தயவு செய்து விலகிவிடுங்கள்!!

கருத்துகள் இல்லை: